
உலக மகளிர் தினவிழா ம.தி.மு.க. சார்பில் எழும்பூரில் உள்ள தாயகத்தில் கொண்டாடப்பட்டது. மகளிர் அணி தலைவி குமரி விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
இலங்கையில் மரணம் அடைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது தஞ்சையைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் அவரைச் சந்தித்து ஆசி பெற்று திரும்பினார். ம.தி.மு.க. சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் பத்மாவதி கவுரவிக்கப்பட்டார்.
அவருக்கு வைகோ நினைவு பரிசு வழங்கினார். பத்மாவதி இலங்கையில் இருந்து மண் எடுத்து வந்து இருந்தார். அந்த மண்ணை வைகோவிடம் கொடுத்தார். அதை அவர் நெற்றியில் பூசிக் கொண்டார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், பெண்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் அமெரிக்காவில் பெண்கள் அமைப்பு போராடியது. அந்த நாளை உலக மகளிர் தின விழாவாக கொண்டாடுகிறோம். தமிழக வரலாற்றில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் பெண்களுக்கு நீதி கேட்டு போராடினார்கள். பெண்கள் உரிமைக்காக சட்டம் இயற்றவும் காரணமாக இருந்தார்கள்.
இதேபோல் இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயாரை சந்தித்து திரும்பிய தஞ்சை பெண் பத்மாவதிக்கும் இன்று பாராட்டு விழா நடந்தது," என்றார்.


